தேடுபொறி ரகசியங்கள்
இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வசதி எதுவென்று கேட்டால், நான் உள்பட அதிகமானோரின் பதில் “தேடுபொறி” என்று தான் வரும். அதிலும் கூகிள் தேடுபொறியை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என எண்ணுகிறேன். வலைத்தளம் (Websites or Blogs) வைத்திருக்கும் அதிகமானோரின் ஆசை தேடுபொறிகளில் நமது தளம் முதல் பக்கத்தில் வர வேண்டும் என்பது தான். எப்படி வரவழைப்பது? அது தொடர்பாக நான் கற்ற சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.
முதலில் தேடுபொறிகள் எப்படி வேலை செய்கிறது? என்று நாம் சிறிதளவு பார்ப்போம்.
தேடுபொறிகள் இணையத்தில் உள்ள கோடிக்கணக்கான பக்கங்களை ஊடுருவிச் சென்று தகவல்களை சேகரிப்பதற்காக ஒருவித தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. அதற்கு Robots, Spiders, Crawlers என்று வேறு வேறு பெயர்கள். அவைகள் உங்கள் தளத்தில் உள்ள தகவல்களை குறிச்சொற்கள்வாரியாக (Keywords) சேகரித்து தங்கள் சர்வரில் (Server) சேமித்து வைத்துக் கொள்ளும். சேமித்து வைத்த தகவல்களை சில படிமுறைகள் (Algorithms) மூலம் தரம் பிரித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கும். பிறகு பயனாளர்கள் ஒன்றை தேடும்பொழுது, அது தொடர்புடைய இணைய பக்கங்களை தான் சேமித்து வைத்தவைகளில் இருந்து வரிசைப்படுத்திக் காட்டும். இது கூகிள், பிங், யாஹூ உள்பட அதிகமான தேடுபொறிகள் இந்த முறையில் தான் செயல்படுகின்றது.
ஒவ்வொரு தேடுபொறிகளும் தான் சேகரித்துவைத்துள்ள இணையப் பக்கங்களை தரம் பிரித்து வரிசைப்படுத்துவதில் வெவ்வேறு படிமுறைகளை பயன்படுத்துகின்றன. அம்முறைகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.
நாம் காணவிருப்பது பொதுவாக அனைத்து தேடுபொறிகளிலும் முன்னிலை வருவதற்கான வழிமுறைகள். அதற்கு முன் ஒன்றை நினைவில் வைக்கவும். இந்த வழிமுறைகள் மூலம் நம் பதிவுகள் ஒரே நாளில் முன்னிலையில் வந்துவிடாது. அதற்கு சில காலங்கள் ஆகலாம்.
சில உதாரணங்கள் மூலம் எளிதில் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.
ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சில மனிதர்கள் இருக்கிறார்கள். சில ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கின்றன. வெளியூரிலிருந்து சிலர் வருகின்றனர்.
ஊர் - இணையம்
சில மனிதர்கள் - தேடுபொறிகள்
ஐஸ்க்ரீம் கடைகள் - வலைத்தளங்கள்
வெளியூர்காரர்கள் - பயனாளர்கள் (Users)
வெளியூர் நபர்கள் அங்குள்ள மனிதர்களிடம் "ஐஸ்க்ரீம் எங்கே இருக்கும்?" என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த மனிதர்கள் பதில் சொல்ல வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு ஐஸ்க்ரீம் இருக்கும் கடைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரியவில்லையெனில், "ஐஸ்க்ரீம் இங்கு இல்லை" என்று சொல்லிவிடுவார்கள். அப்படியென்றால், கடைக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் அந்த மனிதர்களுக்கு ஐஸ்க்ரீம் கடைகள் இருப்பது பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
அதாவது, நம்முடைய வலைத்தளம் பற்றி தேடுபொறிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது Site Index எனப்படும். எப்படி தெரியப்படுத்துவது?
கூகிள் தேடுபொறிக்கு தெரியப்படுத்த http://www.google.com/addurl/ என்ற முகவரியிலும்,
பிங் தேடுபொறிக்கு தெரியப்படுத்த http://www.bing.com/webmaster/SubmitSitePage.aspx என்ற முகவரியிலும்,
யாஹூ தேடுபொறிக்கு தெரியப்படுத்த https://siteexplorer.search.yahoo.com/ என்ற முகவரியிலும் சென்று தங்கள் தளத்தின் முகவரியை சமர்ப்பிக்கவும்.
இதில் கூகிள், பிங் தளத்தில் சமர்ப்பிப்பது எளிது. ஆனால் யாஹூ தேடுபொறியில் சமர்ப்பிக்க நீங்கள் யாஹூ கணக்கு மூலம் உள்நுழைய வேண்டும். மேலும் சில காரியங்கள் நீங்கள் செய்ய வேண்டும்.
யாஹூ தேடுபொறியில் சமர்ப்பிக்கும் முறை:
மேற்சொன்ன யாஹூ முகவரிக்கு சென்று உங்கள் தள முகவரியை கொடுத்தால், அவர்கள் Meta Tag ஒன்று கொடுப்பார்கள். அதற்கு கீழே Ready to authenticate என்ற பட்டன் இருக்கும்.
ப்ரவ்சரில் இன்னொரு Tab-ஐ திறந்து, உங்கள் ப்ளாக்கின் Edit Html பகுதிக்கு சென்று, <body> என்ற Code-ற்கு முன் அந்த Meta Tag-ஐ Paste செய்யவும்.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
பிறகு மீண்டும் யாஹூவின் மேற்சொன்ன தளத்திற்கு வந்து, Ready to authenticate என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
Site Authenticated என்று சொன்னால் சமர்பித்ததாக அர்த்தம்.
சரி, அந்த மனிதர்களுக்கு நமது ஐஸ்க்ரீம் கடை பற்றி தெரிவித்துவிட்டோம். அவர் எப்பொழுது நமது கடைக்கு வருவார்? அவர் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா? வேண்டாம். அவரை நமது கடைக்கு கொண்டு வர வேறொரு வழி இருக்கிறது.
2. அவர் அடிக்கடி எந்த கடைகளுக்கு செல்கிறாரோ, அந்த கடைகளில் நமது கடை பற்றி விளம்பரம் செய்வது.
அதாவது, தேடுபொறிகளில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட தளங்களில், நமது தளத்தின் சுட்டியை(Links) இணைப்பது. அவ்வாறு இணைக்கப்படும் நமது சுட்டிகள் BackLinks எனப்படும். இதன் மூலம் அந்த தளத்திற்கு வரும் தேடுபொறிகளின் Crawlers (or Spiders or Robots), அங்குள்ள நமது சுட்டிகளை பார்த்து, நமது தளத்திற்கும் வருகை தரும். பின் நமது தளத்தின் தகவல்களையும் சேகரித்து வைத்துக்கொள்ளும்.
சரி, நமது கடைகளில் ஐஸ்க்ரீம் உள்ளதைப் பற்றி அவர் தெரிந்துக் கொண்டார். நம்மை போன்று பலர் ஐஸ்க்ரீம் கடைகள் வைத்துள்ளனர்.
இப்பொழுது வெளியூர்க்காரர்கள் அந்த மனிதர்களிடம் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால், எந்த கடைக்கு முதலில் பரிந்துரை செய்வார்?
நமது கடையை பரிந்துரை செய்யவைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இறைவன் நாடினால், ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.





கருத்துரையிடுக